சின்ரனின் "வாக்குறுதி"


            நெடு நாட்களுக்கு முன் பரிசாகக் கிடைத்த புத்தகம் "வாக்குறுதி". படிக்கப்படாமலேயே இருந்தது, ஆனால் தொடங்கியவுடன் பற்றிக்கொண்டு விட்டது.





     பிரிட்டிஷ் சீன பெண் எழுத்தாளர் சின்ரன், சீனாவின் ஒரே குடும்பத்தின் நான்கு தலைமுறையைச் சேர்ந்த பெண்களை நேர்காணல் செய்து எழுதிய புத்தகம்தான் "வாக்குறுதி". நேர்காணலுக்கான உட்கரு அவர்களின் காதல் வாழ்வு.

    மிகச் சுருக்கமான கேள்விகளுக்கு கிடைக்கும் விரிவான அனுபவங்களின் பதிவு  கிட்டத்தட்ட ஒரு நாவல் படிப்பது போன்ற உணர்வைக் கொடுக்கிறது.

    தொடக்கத்தில் எண்பது வயது கடந்த, 63 வருடங்கள் திருமண வாழ்வை நிறைவு செய்த முதியவள் ஒருத்தி தன் கணவன் இறந்த பின் கன்னிமைப் பரிசோதனை செய்து கொள்கிறாள்.  அதிர்ச்சி அளிக்கும் அந்தப் பரிசோதனையின் முடிவே இந்த நூல் நம்மை உள்ளிழுத்துக் கொள்ள போதுமானது.

    இப்பெண்கள் பேசுவது என்னவோ தங்கள் காதல் அல்லது திருமண வாழ்வு பற்றித்தான். ஆனால் அதனுடன் சேர்ந்து, அதன் பின்னால் விரிவது சீனாவின் நூற்றாண்டு அரசியல், சமூக, பொருளாதார வரலாறு.

வாசிக்கும்போது பல இடங்களில் தோன்றும் உணர்வு, இந்தியர்களாகிய நமக்கு கிடைத்திருக்கும் உரிமைகள் எவ்வளவு மதிப்புடையதென்பது !

கலாச்சார புரட்சி கால சீனாவில் அடக்கு முறைகள் எப்படி இருந்தன என்பதற்கு சில காட்டுகள்...

 ஒரு கிராமத்தில் திருமணம் நடக்கிறது. வீட்டில் மாவோ-வின் படத்தை மாட்டி வைத்து, அவரின் வாசகங்களை எழுதி வைப்பதுதான் அப்போதைய "புரட்சி"  வழக்கம்.  கிராமவாசி ஒருவர் தலைவர் உங்களை பார்த்துக்கொண்டிருக்கும்போதுதான் இரவில் அனைத்தும் செய்வீர்களா என்று கேட்கிறார்.  நாங்கள்தான் இரவில் விளக்கை அணைத்து விடுவோமே, தலைவரால் பார்க்க முடியாதல்லவா என்று புதுமணத் தம்பதியர் பதிலளிக்கின்றனர்.  சிறிது நேரத்திற்குள்ளாகவே அந்த "புரட்சி ஜோடி" கைது செய்யப்படுகிறார்கள். 


"வல்லமை பொருந்திய நம் தலைவரால் இருட்டிலும் பார்க்க முடியும்" 


ஒரு பள்ளிக்கு குழந்தை "சிவப்புடன் சிறிது பச்சை சேர்வதுதான் அழகு" என்று எழுதுகிறது.  அதற்காக அதன்  பெற்றோர்கள் எதிர் புரட்சியாளர்கள் என்று புரட்சி குழு இயக்குனரால் விசாரிக்கப் படுகிறார்கள். 

"எங்கள் நாட்டின் வரலாற்றிலேயே உணர்ச்சிகளற்ற கால கட்டம் என்று ஒன்று இருந்ததென்றால் அது கலாச்சார புரட்சி காலம்தான். முத்தமிட்ட குற்றத்துக்கெல்லாம் காதலர்கள் சிறைக்குள் தள்ளப்பட்டார்கள்"  -இது ஒரு நான்காம் தலைமுறைப் பெண்ணின் கருத்து.


1927 -இல் இருந்து மாவோவின் இறப்பு வரை உள்நாட்டு வெளிநாட்டுப் போரோ அல்லது கலாச்சார புரட்சியோ ஏதோ ஒன்று மக்களை எப்போதும் பெரும் அழுத்தத்திலேயே வைத்துள்ளது. 


        மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு, பெரும் உணவுப் பற்றாக்குறையில் உள்ளது. அதில் ஒரு கிராமத்தை தேசியவாதப் படை பிடித்தால் அங்குள்ள இளைஞர்கள் எல்லாம் தேசியவாதப்படையில் சேர்க்கப்படுவார்கள். கம்யூனிச படை பிடித்தால் இவர்களது படையில்.  வீரர்களுக்கு கொள்கை என்றெல்லாம் தனியாக இல்லை. இப்படித்தான் போர் பற்றிய அபத்தம்  நமக்கு புரிய வைக்கப்படுகிறது.

         நவீன தொழில்நுட்ப யுகத்தில் இருக்கும் நான்காம் தலைமுறையினரையும் சின்ரன் பேட்டி காண்கிறார். எப்படி ஒரு அதிர்ச்சி தொடக்கத்தில் இருந்ததோ, அதே போன்று ஆனால் அதன் மற்ற எல்லையில்  இன்னொரு அதிர்ச்சியும் பேட்டிகளின் முடிவில்  காணக்கிடைக்கிறது. 

        நூலின் மொழி பெயர்ப்பு பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். எந்த இடத்திலும் உறுத்தாத சிறப்பான மொழி பெயர்ப்பு சசிகலா பாபுவுடையது. அதிலும் அவர் ஒரு கவிஞர் என்பதால் நூல் முழுதும் பரவிக்கிடக்கும் கவிதைகளையும் நன்றாகக் கையாண்டிருக்கிறார்.

நிச்சயமாக நம் பார்க்கும் பார்வையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் நூல். எதிர் வெளியீடாக வந்திருக்கிறது.


Comments

Popular posts from this blog

சீனலட்சுமி - சிங்கப்பூர் கதைகள் - எழுத்தாளர் லதா

கிழக்கு அருணாச்சல் - அணினி ( Anini ) பயணம் - திப்ருகார் முதல் அணினி வரை

கிழக்கு அருணாச்சல் - அணினி ( Anini ) பயணம் - நிறைவுப் பகுதி